தென்கிழக்காசியாவில் தனது வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் புதிதாக 3,000 பேரை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளது கணக்கியல் பெருநிறுவனமான ‘டெலாய்ட் (Deloitte)’.
இவ்வட்டாரத்தில் இப்போது அந்நிறுவனத்தில் மொத்தம் 13,000 பேர் வேலை பார்க்கின்றனர். அதன் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.3 பி.).
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்விரண்டையும் இரட்டிப்பாக்க அந்நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.
“கணக்கியல், பொறியியல், வணிகம் உள்ளிட்ட எல்லாவித கல்விப் பின்னணி கொண்டவர்களையும் வேலைக்கு எடுக்க தயாராகவுள்ளோம். உளவியல் படித்தவர்களும்கூட விண்ணப்பிக்கலாம். திறமையானவர்களை ஈர்த்து, பயிற்சியளிக்க ஆர்வமாக இருக்கிறோம்,” என்று தென்கிழக்காசிய வட்டாரத்திற்கான டெலாய்ட் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்கவுள்ள யூஜின் ஹோ கூறினார்.
சிங்கப்பூரில் இப்போது ஏறத்தாழ 100,000 நிதி, கணக்கியல் நிபுணர்கள் உள்ளனர் என்றும் அத்துறையில் வரும் 2025ஆம் ஆண்டிற்குள் புதிதாக 7,000 வேலைகள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.