தீமிதித் திருவிழாவில் கடந்த 17 ஆண்டுகளாக ஸ்ரீ மாரியம்மன் கோயில் தொண்டூழியர்களாகவும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களாகவும் கலந்துகொண்டு வருகிறார்கள் தம்பதியினரான 31 வயது திருமதி பூ.கார்த்திகாயினி, 33வயது திரு ரா.ஜெயகணேஷ்.
இந்தத் தம்பதியினருக்கு ஜெ.வேலன், 6, ஜெ. கிருஷ்ணா, 5, என்ற இரண்டு பிள்ளைகள் உண்டு.
“என் பாட்டியைப் பின்பற்றி இந்த விழாவில் கலந்துகொண்டு வருகிறேன். என் கணவரும் அவரின் தந்தையைப் பின்பற்றி 16 வயது முதல் தீமிதித்து வருகிறார்.
“பல தலைமுறைகளைக் கடந்து வரும் இந்த பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பது நமது கடமை. அதனால் பிள்ளைகளையும் ஆண்டுக்காண்டு தீமிதித் திருவிழா உட்பட மற்ற மாரியம்மன் கோயில் விழாக்களுக்கும் அழைத்து வருகிறோம்,” என்றார் திருமதி கார்த்திகாயினி.
இவ்வாண்டின் தீமிதித் திருவிழாவில் 4,191 ஆண் பக்தர்களும் 646 பக்தைகளும் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினராக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இரவு 7.30 மணி அளவில் மாரியம்மன் கோயிலுக்கு வருகைதந்து பார்வையிட்டார். ஆலயப் பண்டாரமான திரு வேணுகோபால் திருநாவுக்கரசு, 37, அமைச்சருக்கு மரியாதைகள் செய்தார். ஆலயப் பண்டாரம் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தமது தலையில் கரகத்தை ஏந்தி ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலை விட்டுக் கிளம்பினார்.
ஊர்வலமாக சென்று இரவு 8.40 மணி அளவில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலை அடைந்தார்.
ஆலயப் பண்டாரம் இரவு மணி 8.50 அளவில் பூக்குழியை வெற்றிகரமாகக் கடந்தது பக்தர்கள் மனதில் பூரிப்பை ஏற்படுத்தியது.
“பண்டாரம் சிறப்பாக கரகத்தை ஏந்தி, ஆடி பூக்குழியைக் கடந்தார். அதைப் பார்த்த அனைவருக்கும் அது மகிழ்ச்சி தந்தது. பின்தொடர்ந்த பக்தர்களுக்குத் தன்னம்பிக்கையும் அளித்தது. பதிவுசெய்வது, ஊர்வலம் என அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக செய்யப்பட்டு விழா சுமுகமாக நடந்தேறியது,” என்றார் ஏறக்குறைய 18 ஆண்டுகளாக தீமிதித் திருவிழாவில் ஈடுபடும் திரு கி. முத்தமிழ் செல்வன், 43.
விழாவின்போது இரவு மணி 11 அளவில் ஏறத்தாழ 5 நிமிடங்களுக்கு மழை பெய்தது. அதனால் பூக்குழி மூடப்பட்டு நிகழ்ச்சி சற்று தாமதமாகியது. இருப்பினும் பக்தர்கள் மனந்தளராமல் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்டனர். திருவிழா சுமுகமாக நடந்து அதிகாலை 5 மணி அளவில் நிறைவுற்றது.
“பக்தர்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். இரவு முழுவதும் நடக்கும் சமய விழா இது. எதிர்பாராத சம்பவங்கள் நடந்தாலும் பொறுமையாகக் காத்திருந்து வழிபாடுகளை முடிப்பதே நல்லது,” என்றார் திருமதி கார்த்திகாயினி.
நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் பதிவு செய்யும் முறை இவ்வாண்டு பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி மாற்றம் கண்டுள்ளது. பக்தர்களின் பதிவு உறுதிப்படுத்தப்பட்டவுடன் ‘க்யூஆர்’ குறியீடு மற்றும் முக்கிய விவரங்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கடிதம் ஆகியவை மூலம் வழங்கப்பட்டன. மணிக்கட்டுப்பட்டை ஆண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
“முதியோர், குழந்தைகளை அழைத்து வரும் தாய்மார்கள் என்று பலருக்கும் இடப்பற்றாக்குறை ஒரு சவாலாக இருந்துள்ளது. புதிய பதிவுமுறை இந்த பிரச்சினையைச் சற்று சமாளித்தாலும் புதிய முறைகள் அனைத்து பக்தர்களுக்கும் இன்னும் புரியவில்லை. முதல் முறை செயல்படுத்தும்போது நிச்சயம் சவால்கள் இருக்கும். வருங்காலத்தில் பதிவு முறை மேலும் எளிதாகும் என்று நம்புகிறன்,”என்றார் திருமதி கார்த்திகாயினி.
கடந்த 31 ஆண்டுகளாக இத்திருவிழாவில் ஈடுபட்டு வருகிறார் சீன இனத்தவரான 64 வயது திரு டேவிட் இங். சகோதரி, அவரின் மகள் ஆகியோரின் நலத்திற்காக ஓவ்வோர் ஆண்டும் பக்தியோடு இவர் தீமிதித்து வருகிறார்.
“எனது நேர்த்திக்கடன்கள் உடனே நிறைவேறின. சக்தி எனும் அம்மன் மீது எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு. இவ்வாண்டின் பதிவு முறையும் சிறப்பாக செய்யப்பட்டது. பாதுகாப்பு அதிகரித்துள்ளது,” என்றார் திரு டேவிட்.
எதிர்காலத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இணையம் மூலம் பதிவு செய்வதற்கான இலக்கு இருப்பதாகவும் இந்தப் புதிய முறை அந்த இலக்கை அடைவதற்கான முதல் படி என்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தலைவர் திரு லட்சுமணன் தெரிவித்தார்.