வூஹான் ‘கொரோனா’ கிருமித் தொற்றலைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூர் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் தொடந்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்துக்கு இன்று (ஜனவரி 31) வருகையளித்த பிரதமர் அங்கு தன்னலமின்றி பணியாற்றும் ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையத்தில் உள்ள தனிப்பட்ட அறைகளில்தான் கொரோனா கிருமித் தொற்றியதாக உறுதி செய்யப்பட்ட 13 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அடையாளம் கண்டுபிடித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
“கிருமித் தொற்றுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது அவசியம், சிங்கப்பூரைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்,” என்று கூறிய திரு லீ, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஆயத்தமுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சீனாவில் மோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ள கொரோனா கிருமிப் பரவல் தற்போது உலகளவில் பொதுச் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக வியாழக்கிழமை அன்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இந்தச் சூழ்நிலையில் தொற்று நோய்க்கு எதிராக ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
“சிங்கப்பூர் சமூகத்தினரிைடயே கொரோனா கிருமி பரவல் இதுவரை நிகழவில்லை, அதே சமயத்தில் அது பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
“உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் அது கிருமித் தொற்றுச் சம்பவமா என்பது கண்டுபிடிக்கப் பட்டு அவர்களை தனிமைப்படுத்த முடியும். நாம் சுயமாகவே சுத்தமாக இருப்பதும் அவசியம், அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். தேவையில்லாமல் முகம், வாய், கண்களை தொடக்கூடாது. காரணம், அப்படித்தான் கிருமி உடலுக்குள் பரவுகிறது,” என்று பிரதமர் லீ சொன்னார்.
சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் 213 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 9,692 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
அதனையடுத்து, சீனாவுக்கு அண்மையில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் விமானச் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. சீனாவுக்கான ஸ்கூட் விமானச் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
‘கொரோனா’ கிருமி அதிவேகமாக பரவுவதால் அவசரகால நெருக்கடி அறிவிக்கப்பட்ட நிலையில் சீனாவுக்கான விமான சேவைகளை நிறுத்த வேண்டும் என்று விமானிகளும் விமான ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் தொடர்பில் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானிகளும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர்.
#தமிழ்முரசு #வூஹான் #NCID