கொரோனா கிருமித்தொற்று பரவலை முறியடிக்கும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களுக்கும் இதர பராமரிப்பு வசதிகளில் தங்கி இருப்போருக்கும் வழங்கப்படும் உணவின் தரம் மேம்பட்டுள்ளது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்த தொடக்க காலத்தில் உணவின் தரம் குறித்து அரசாங்கத்திற்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
அந்த நேரத்தில் ஊழியர்களுக்கு உணவளிக்க பெரியளவில் தளவாட முயற்சிகள் மேற்கொள்வது போன்ற பல சிரமங்கள் இருந்தன என்று விளக்கினார் கொரோனா கிருமியை எதிர்த்துப் போராட அமைக்கப்பட்டுள்ள அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் லாரன்ஸ் வோங்.
“‘சாட்ஸ்’ (SATS), மற்றும் ஏனைய உணவு விநியோகிப்பாளர்கள் தொடர்ந்து கருத்துகளைப் பகிர்கிறார்கள்.
“அவற்றின் அடிப்படையிலும் பராமரிப்பு வசதிகளில் வசிப்போர், தங்கும் விடுதிகளின் ஊழியர்கள் போன்றோரின் கருத்துகளை வைத்தும் வழங்கப்படும் உணவின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அறிகிறேன்.
“தொடக்கத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளையும் உணவு விநியோகிப்பவர்கள் கருத்தில்கொண்டுள்ளார்கள்,” என்று அமைச்சர் லாரன்ஸ் கூறினார்.
அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று (ஏப்ரல் 28) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் பற்றி தமிழ் முரசு முன்வைத்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் திரு லாரன்ஸ் வோங்.
தங்கும் விடுதிகளில் இருக்கும் ஊழியர்கள் தாங்களே சமைத்துச் சாப்பிட்டுப் பழகியவர்கள் என்று சுட்டிய அமைச்சர் லாரன்ஸ், பாதுகாப்பு இடைவெளியை நடைமுறைப்படுத்த சமூகமாக சேர்ந்து செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் அவர்களால் இப்போது சமைத்துச் சாப்பிட முடியாது என்பதையும் குறிப்பிட்டார்.
“ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பதையும் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளோம். அதனால் சில மாற்றங்களைச் செய்யவேண்டும். நோன்பு துறக்கும்போது வழங்கப்படும் உணவின் அளவை அதிகரிக்கவேண்டும். நோன்பு வைக்கும்போதும் தக்க உணவை வழங்கவேண்டும்,” என்று அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
தளத்தில் சேவையாற்றும் குழுக்களும் உணவு விநியோகிப்பவர்களும் உணவு குறித்த சர்ச்சைகளில் கூர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் ஊழியர்களிடமிருந்து சேகரிக்கப்படும் கருத்துகளைக் கொண்டு தொடர்ந்து மாற்றங்களைச் செய்து வருவதாகவும் உறுதியளித்தார் அமைச்சர் லாரன்ஸ் வோங்.