துவாஸ் ஆலை தீ விபத்தில் சிக்கிய இந்திய ஊழியர் எஸ்.மாரிமுத்து, பிறந்து பத்து மாதமே ஆன தமது இரண்டாவது மகளை நேரில் பார்க்காமலேயே இறந்துபோனார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அவரின் மனைவி அக்குழந்தையை ஈன்றெடுத்தார். அப்போது சிங்கப்பூரில் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தது.
கடைசியாக 2019 ஆகஸ்ட் மாதம் மாரிமுத்து இந்தியா சென்று வந்தார். 38 வயதான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தம் குடும்பத்தினருடன் காணொளி வழியாகப் பேசியதே கடைசி முறையாகிப் போனது.
மறுநாள் காலையில் துவாஸ் தொழிலகக் கட்டடத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தார் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த திரு மாரிமுத்து.
காயமடைந்த பத்துப் பேரில் சிகிச்சை பலனின்றி மாண்ட மூவரில் இவரும் ஒருவர்.
மேலும் ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர்.
தீப்பாதுகாப்பு உபகரணங்களைக் கையாளும் ஒப்பந்ததாரரான ‘ஸ்டார்ஸ் எஞ்சினியரிங்’ எனும் நிறுவனத்தில் அவ்விபத்து நிகழ்ந்தது. காயமுற்றோரில் எண்மர் அந்நிறுவனத்தின் ஊழியர்கள்.
“திரு மாரிமுத்து தமது குடும்பத்தின் தூணாக விளங்கினார்,” எனக் குறிப்பிட்டார் புலம்பெயர் தொழிலாளர் விவகாரங்களில் அக்கறை செலுத்தும் ‘இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ் (ஐஆர்ஆர்)’ எனும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் தொண்டூழியர் திரு ஆகாஷ் மொகபத்ரா.
திரு மாரிமுத்து கடந்த 12 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றி வந்ததாக திரு ஆகாஷ் குறிப்பிட்டார். வயதான தாயார், இளைய சகோதரிகள் நால்வர், மனைவி ராஜபிரியா, 28, மகள்கள் ரியாஸ்ரீ, 5, பத்து மாதமேயான லித்திஷா ஆகிய அனைவருக்கும் இவரே ஆதரவாகத் திகழ்ந்து வந்தார்.
இந்தத் துயரமான தருணத்தில் நிபுணத்துவ ஆலோசகர் ஒருவர் மூலமாக ஐஆர்ஆர் அமைப்பு, திரு மாரிமுத்துவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டது.
திருவாட்டி இந்து சுகுமாறன் நாயர் எனும் அந்த ஆலோசகர், தொலைபேசி வழியாக திரு மாரிமுத்துவின் மனைவிக்கும் இங்கு பணிபுரியும் அவரின் சகோதரருக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
‘கிவ்.ஏஷியா’ எனும் பொது நிதித்திரட்டு இணையத்தளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியிலும் ஐஆர்ஆர் ஈடுபட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல் 3 மணி நிலவரப்படி $148,000 நிதி திரட்டப்பட்டிருந்தது.
அவ்வாறு திரட்டப்படும் நிதி, மாண்ட ஊழியர்கள் மூவரின் குடும்பங்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என கிவ்.ஏஷியா அமைப்பு தெரிவித்தது.
இதுவரை திரு மாரிமுத்துவின் குடும்பத்தினரை மட்டுமே அந்த அமைப்பால் தொடர்புகொள்ள முடிந்துள்ளது. மற்ற ஊழியர்கள் இருவரின் குடும்பங்களையும் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
https://give.asia/campaign/support-for-the-marimuthu-s-family-tuas-expl… எனும் இணையப்பக்கம் வழியாக இந்த நிதிதிரட்டு முயற்சிக்குப் பங்களிக்கலாம்.