பொங்கோல் வட்டாரத்தில் உள்ள புளோக் 325A சுமாங் வாக்கில் மூன்று வேறு குடும்பங்களில் எட்டுப் பேருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படவிருக்கிறது.
சமூக அளவில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில், அந்த புளோக்கில் வசிக்கும் அனைவருக்கும் ‘பிசிஆர்’ பரிசோதனைகளைத் தான் நடத்தவிருப்பதாக சுகாதார அமைச்சு இன்று (ஜூன் 7) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
புளோக் 324 சுமாங் வாக்கில் அமைந்திருக்கும் கூடார மண்டபத்தில் நாளையும் நாளை மறுநாளும் (ஜூன் 8, 9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பரிசோதனை நடத்தப்படும்.
துண்டுப்பிரசுரங்கள், குறுஞ்செய்தி வழி குடியிருப்பாளர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மே 10ஆம் தேதிக்கும் ஜூன் 5ஆம் தேதிக்கும் இடையில் அந்த புளோக்கிற்கு சென்றவர்களும் பரிசோதனை செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.