சிங்கப்பூரில் இன்று (ஜூலை 12) முதல் உணவுக் கடைகளில் ஐந்து பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது.
ஜூன் 21 முதல் நேற்று (ஜூலை 11) வரை கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக இருவர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டுப்பாடு இப்போது மேலும் தளர்த்தப்பட்டிருப்பதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
உணவங்காடி நிலையங்களில் இன்று மதிய வேளை உணவுக்காக மூத்தோர் பலர் ஐந்து பேர் அடங்கிய குழுக்களாக ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதைக் காண முடிந்தது. நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து உணவருந்த இன்றைய தினத்திற்காக தாங்கள் காத்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட முதல் நாள் என்பதால் பொதுவாக இன்று வியாபாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று உணவங்காடி நிலைய கடைக்காரர்கள் பலர் கூறினர்.
திங்கிட்கிழமைகளில் பல உணவகங்களும் சந்தைகளும் மூடப்பட்டிருப்பதாலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை தொடர்வதாலும் வாடிக்கையாளர் கூட்டம் சற்று குறைவாக இருப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.