அதிகபட்சம் ஐவர் ஒரு குழுவாகச் சேர்ந்து உண்ண அனுமதி
அதிகபட்சம் ஐவர் அடங்கிய குழுக்களாக அமர்ந்து சாப்பிடலாம் என்ற புதிய தளர்வு நேற்று முதல் நடப்பிற்கு வந்தது உணவகத் தொழில்புரிவோர்க்குப் புத்துயிர் அளிப்பதாக அமைந்துள்ளது.
தேக்கா பகுதிக்கு நேற்று நண்பகல் நேரத்தில் சென்றிருந்தபோது, உணவகங்களில் மக்கள் நடமாட்டம் கணிசமாகக் கூடியிருந்தது தெரிந்தது.
ஆனால், அதிலும் ஒரு சிக்கல். தேக்கா நிலையத்தில் ஐவர் அமர்ந்துண்ணும் வகையில் சில மேசைகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், பல மேசைகளிலும் இருவர் அல்லது நால்வர் மட்டுமே அமர முடியும் வகையில் இருந்தன.
“காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வந்தனர். இரண்டு மாத காலமாகக் காத்திருந்து நம் கடையில் சாப்பிட ஆசைப்பட்டனர். ஆனால், அவர்கள் ஐவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட மேசை இல்லாததால் கிளம்பிவிட்டனர்,” என்றார் தேக்கா நிலையத்தில் கடந்த 39 ஆண்டுகளாக இயங்கி வரும் ‘ஜம் ஜம்’ உணவகத்தின் உரிமையாளர் திரு நூருல் அமீன், 46.
வாடிக்கையாளர்கள் பலர் வந்து சாப்பிட்டதும் கிளம்பாமல் நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்திருப்பது மற்றொரு பிரச்சினை என்றார் தேக்கா நிலையம், சிவானி’ஸ் உணவக ஊழியர் திருமதி மல்லிகா சுப்பிரமணியம், 41.
“சிலர் கதை பேசிக்கொண்டும் திறன்பேசியில் படம் பாத்த்தபடியும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து இருக்கிறார்கள்,” என்றார் திருமதி மல்லிகா.
மற்ற உணவகங்கள் இதுபோன்ற பிரச்சினைகள் இன்றிச் சுமுகமாகச் செயல்பட்டன.
“எங்களது உணவகத்தில் குடும்பமாகப் பலரும் வந்து சாப்பிடுவது வழக்கம். இந்தப் புதிய தளர்வுகளால் வியாபாரம் கூடும்,” என்று கோமள விலாஸ் உணவகத்தின் இயக்குநர் திரு ராஜகுமார் குணசேகரன், 35, சொன்னார்.
சேர்ந்து உண்ணும் குழுவினரில் ஐவர்வரை இடம்பெறலாம் என்றபோதும் பயண எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சுற்றுப்பயணிகள், வெளிநாட்டு ஊழியர்கள் போன்றோர் வழக்கம்போல வந்துசெல்ல முடியும்வரை வர்த்தகங்கள் வழக்கநிலைக்குத் திரும்புவது கடினம் என்றார் திரு ராஜகுமார்.
உணவு விநியோகம், உணவு வாங்கிச் செல்வது போன்றவை இருந்தாலும் கடைக்காரர்கள் பலரும் நேரடி விற்பனையைத்தான் நம்பி உள்ளனர் என்று லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவரும் பனானா லீஃப் அப்போலா உணவகத்தின் உரிமையாளருமான திரு சங்கரநாதன், 49, கூறினார்.
“பொதுவாகவே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மக்கள் நடமாட்டம் அதிகரிப்பது வழக்கம்தான். அது, உணவகங்களுக்கு மட்டுமின்றி மற்ற பல வணிகங்களுக்கும் கைகொடுக்கும்,” என்றார் திரு சங்கரநாதன்.