ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுவா சூ காங்கில் செயல்பட்டு வரும் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர்பள்ளி ஒன்று மூடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவர்களுடன் அண்மையில் பள்ளியில் இருந்த அனைத்து சிறுவர்களும் பணியாளர்களும் நேற்று (ஜூலை 14) முதல் ஜூலை 26 வரை கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக முதன்மை நிர்வாக பள்ளி முதல்வர் ஜெனிகா இங் தெரிவித்துள்ளார்.
வளாகத்தை முழுமையாக தூய்மைப்படுத்துவதற்காக அந்தப் பாலர்பள்ளி நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளதாகவும் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
Kindergarten 1 வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பாலர்பள்ளியிடம் சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 14) மாலை தெரியப்படுத்தியது.
Playgroup வகுப்பைச் சேர்ந்த மற்றொரு பிள்ளைக்கு இன்று (ஜூலை 15) காலை தொற்று உறுதியானது.
கடந்த திங்கட்கிழமை இரு பிள்ளைகளும் கடைசியாக பாலர்பள்ளிக்குச் சென்றிருந்தனர். அப்போது அவர்களிடம் உடல்நலம் குன்றியதற்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடல்வெப்பநிலை பரிசோதனையில் காய்ச்சலுக்கான அறிகுறியும் தென்படவில்லை.
நோயாளியின் ரகசியத்தன்மையைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட அந்த இரு பிள்ளைகள் குறித்த மேல் விவரங்களை பாலர்பள்ளியால் வழங்க இயலாது என்று கூறிய திருமதி இங், அனைத்து பிள்ளைகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுடன் சேர்ந்து பள்ளி பணியாற்றும் என்றார்.
அப்பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோரை சுகாதார அமைச்சு தொடர்புகொள்ளக்கூடும் என்று திருமதி இங் தெரிவித்தார்.
குழந்தைப் பராமரிப்புச் சேவை நாளை (ஜூலை 16) தொடரும். இதர வகுப்புகள் அனைத்தும் ஜூலை 27ஆம் தேதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.