தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கடைத்தொகுதிகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படாது என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடைத்தொகுதிகளில் உள்ள பொது மருத்துவ மருந்தகங்கள், பல் மருத்துவர் ஆகியோரைப் பார்க்க தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கடைத்தொகுதிகளுக்குச் செல்லலாம்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட ஃபேஸ்புக் காணொளிப் பதிவு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஆகியோர் பதிலளித்தனர். பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதிபெறுவோர் அதை ஏன் போட்டுக்கொள்ள வேண்டும், கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதற்கான காரணம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் அந்த ஆறு நிமிட காணொளியில் பேசினர்.