இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த வாரம் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிழைத்த ஒரே நபர் மரணமடைந்தார்.
அந்த விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குழும கேப்டன் வருண் சிங் பெங்களூரில் உள்ள இந்திய ஆகாயப் படை மருத்துவமனையில் மாண்டார்.
இந்திய ஆகாயப் படை இத்தகவலை இன்று (டிசம்பர் 15) தெரிவித்தது.
அவருக்கு உயிர் காப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே விழுந்து விபத்துக்கு உள்ளானது.
அந்த விபத்தில் கேப்டன் வருண் ஒருவரே உயிர்பிழைத்தார்.
திரு பிபின் ராவத் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியிலே உயிரிழந்தார் என்று இந்திய ஊடகங்கள் கூறின.
திரு வருண் சிங்கின் மரணத்துக்கு இந்திய ஆகாயப் படை இரங்கல் தெரிவித்தது.
இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்ததோடு, கடைசி மூச்சு உள்ள வரை போராடிய உண்மையான வீரர் என்று அவரை வருணித்தார்.
வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் திரு வருண் சிங் பணியாற்றி வந்தார்.