சிங்கப்பூரில் தற்போது கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரில் 17 விழுக்காட்டினர் ஓமிக்ரான் தொற்றியோர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இது, ஓமிக்ரான் தொற்று அலை விரைவில் வீசலாம் என்பதையும் அதனை எதிர்கொள்ள சிங்கப்பூர் ஆயத்தமாக வேண்டியுள்ளதையும் காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
புத்தாண்டை ஒட்டிய தமது ஃபேஸ்புக் பதிவில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா சூழல் குறித்த அண்மைய தகவலை திரு ஓங் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் கொரோனா பரவல் சீராக உள்ளதாகக் கூறிய அவர், கடந்த வாரத்தில் 1,200 பேர் தொற்றுப் பாதிப்புடன் இருந்ததாகக் குறிப்பிட்டார். முந்திய அலை உச்சத்தில் இருந்தபோது இந்த எண்ணிக்கை 26,000க்கும் அதிகமாக இருந்ததை அவர் சுட்டினார்.
இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் கிட்டத்தட்ட 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“குறைந்தபட்சம் இப்போதைக்கு, டெல்டா கிருமியால் ஏற்பட்ட அண்மைய கொரோனா அலை தணிந்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன,” என்று திரு ஓங் கூறியுள்ளார்.
“ஆனாலும், ஓமிக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போதைக்கு, உள்ளூர் அளவிலான தொற்றுப் பாதிப்பில் 17 விழுக்காட்டினர் ஓமிக்ரான் தொற்றியவர்கள். இது, ஓமிக்ரான் அலை நெருங்கிவிட்டதையும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டியிருப்பதையும் காட்டுகிறது,” என்றார் அவர்.
பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தடுப்பூசியும் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியும் முக்கியமானதாக விளங்குகின்றன என்றும் அமைச்சர் சொன்னார்.