2023லும் 2024லும் இரண்டு கட்டங்களாக சிங்கப்பூரில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக அதிகரிக்கும்.
ஆனால், சாதாரண சிங்கப்பூரர்களுக்குப் பாதிப்பைக் குறைக்க இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
முதலாவது, $6.6 பில்லியன் மதிப்பிலான உத்தரவாதத் தொகுப்புத் திட்டம். 2020 வரவுசெலவுத் திட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் இத்திட்டத்தை முதன்முறையாக அறிவித்து இருந்தார். நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 18) இத்திட்டத்துக்குக் கூடுதல் பணம் ஒதுக்கியுள்ளார்.
இரண்டாவது, மேம்படுத்தப்பட்ட நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் அறிமுகம். உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தில் இருந்து வழங்குதொகை முடிவடைந்த பின்னரும், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் ஆதரவளிக்கும்.
இவ்விரு தொகுப்புத் திட்டங்களின்கீழ் இடம்பெறும் முக்கிய மாற்றங்கள் இவை:
1. 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு $700லிருந்து $1,600 வரையிலான வழங்குதொகை கிடைக்கும்
உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ், 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஏறக்குறைய 2.8 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ரொக்க வழங்குதொகை கிடைக்கும். முதல் வழங்குதொகை டிசம்பரில் அளிக்கப்படும். ஒருவரது வருவாய், சொத்து உரிமையைப் பொறுத்து தொகை நிர்ணயிக்கப்படும்.
தகுதிபெறும் மூத்தோருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு $600 முதல் $900 கூடுதல் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.
2. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யூ-சேவ் கட்டணக் கழிவு ($330 முதல் $570 வரை)
உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏறக்குறைய 950,000 சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூடுதல் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யூ-சேவ் கட்டணக் கழிவு வழங்கப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போருக்கு இந்தக் கழிவு பொருந்தும். வழக்கமான ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யூ-சேவ் கட்டணக் கழிவுடன் சேர்த்து அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து இந்தக் கூடுதல் கழிவு வழங்கப்படும்.
3. கூடுதல் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு ரொக்க வழங்குதொகை, கூடுதலானோர் தகுதிபெறலாம்
உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தில் இருந்து வழங்குதொகை 2026ல் முடிவுபெறும்போது, மேம்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம், குறைந்த வருமான மற்றும் ஓய்வுபெற்ற குடும்பங்களுக்கான செலவுகளைத் தொடர்ந்து ஈடுசெய்யும்.
இத்திட்டத்தின்கீழ் ஜிஎஸ்டி ரொக்கப் பற்றுச்சீட்டு வழங்குதொகை $250க்கும் $500க்கும் இடைப்பட்ட தொகையாக உயரும். ஒருவரது வீட்டு மதிப்பைப் பொறுத்து தொகை நிர்ணயிக்கப்படும். தற்போது இந்த வழங்குதொகை $150க்கும் $300க்கும் இடைப்பட்டிருக்கிறது. ஆண்டு வருமானமாக $28,000 அல்லது அதற்கு குறைவாக ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வருமான வரம்பும் $28,000லிருந்து $34,000ஆக உயர்த்தப்படும். இதன்மூலம், கூடுதலான சிங்கப்பூரர்கள் இத்திட்டத்திற்குத் தகுதிபெற முடியும். 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஏறக்குறைய 1.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் இந்த வழங்குதொகையைப் பெறுவர்.
4. சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவு, ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின் நிரந்தர பகுதியாக அமையும்
ஏறக்குறைய 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் இந்தக் கட்டணக் கழிவுகளைப் பெறும். இதன்மூலம் 1.5க்கும் 3.5 மாதத்திற்கும் இடைப்பட்ட சேவை, பராமரிப்புக் கட்டணங்களை ஈடுசெய்ய முடியும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இந்தக் கட்டணக் கழிவுகள் கிடைக்கும். ஏப்ரலில் தொடங்கி நான்கு கட்டங்களாக இவை வழங்கப்படும்.
5. பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்களுக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கான கூடுதல் ஜிஎஸ்டி செலவை உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் ஈடுசெய்யும்
குறைந்த வருமான குடும்பங்களுக்கு, ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி செலவு ஈடுசெய்யப்படும். மூத்தோருக்கு இன்னும் கூடுதல் உதவி கிடைக்கும்.