சிங்கப்பூரில் சனிக்கிழமை (மார்ச் 19) அன்று 10,244 கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அதன்வழி, சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி தொற்றியவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை பதிவான 10,594 புதிய தொற்றுச் சம்பவங்களைவிட சனிக்கிழமை அன்று குறைவான சம்பவங்கள் பதிவாகின.
அத்துடன் கொவிட்-19 கிருமி தொற்றியவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சனிக்கிழமை அன்று 1,007,158 ஆக இருந்தது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் தொடர்ந்து 18வது நாளாக ஒன்றுக்கும் குறைவாக இருந்தது.
வெள்ளிக்கிழமையைப் போலவே சனிக்கிழமையும் தொற்றுப் பரவல் விகிதம் 0.70 ஆக இருந்தது.
அத்துடன், சனிக்கிழமை நண்பகல்படி 1,130 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர் என்று சுகாதார அமைச்சு கூறியது.
ஒப்புநோக்க வெள்ளிக்கிழமை அன்று 1,175 பேர் மருத்துவமனைகளில் இருந்தனர்.
மேலும் மூவர் உயிர் இழந்ததாக சனிக்கிழமை அன்று கூறப்பட்டது.
வெள்ளிக்கிழமை பதிவான 9 மரணங்களைவிட இது குறைவு.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 27 பேர் சிகிச்சை பெற்றனர்.
மேலும், 127 பேருக்கு செயற்கை உயிர்வாயு சிகிச்சை தேவைப்பட்டது.