சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று மேலும் குறையும்போது, டிரேஸ்டுகேதர், சேஃப்என்ட்ரி போன்ற கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுபரிசீலிக்கப்படும்.
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் திங்கட்கிழமை (ஏப்ரல் 4) அன்று நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான நடவடிக்கைகள், உணவகவங்களில் மேசைகளுக்கு இடையிலான பாதுகாப்பு இடைவெளி போன்ற நடவடிக்கைகளும் மறுஆய்வு செய்யப்படும் என்றார் திரு ஓங்.
இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது, முன்னெச்சரிக்கையுடன் நடந்து தொற்று அதிகம் பரவும் இடங்களைத் தவிர்ப்பது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரின் தனிப்பட்ட பொறுப்பு என்று அமைச்சர் கூறினார். அல்லது அவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு கடும் நோய் ஏற்படும் சாத்தியம் அதிகம்.
அதனால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அதிகமாவதைத் தவிர்க்க தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான நடவடிக்கைகள் இன்னமும் தேவைப்படுகின்றன என்று திரு ஓங் விளக்கினார்.
மருத்துவமனைகளில் நிலைமை மேம்படும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்து, அவற்றைக் குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம் என்றார் அமைச்சர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையிலான நடவடிக்கைகளை நீக்கும்போது சேஃப்என்ட்ரி தேவைப்படாது என்று திரு ஓங் தெரிவித்தார்.
பொதுமக்களின் தொடர்புகளைக் கண்டறிய சுகாதார அமைச்சு இப்போது டிரேஸ்டுகேதர் செயலியைப் பயன்படுத்துவதில்லை.
ஆனால் பள்ளிகள் போன்ற தொற்று அபாயம் அதிகமுள்ள இடங்களில் அமைப்புகள் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.