எம்ஆர்டி ரயில்களிலும் பேருந்துகளிலும் தீபாவளி களை கட்டிவிட்டது.
அடுத்த ஆறு வாரங்களுக்கு சில குறிப்பிட்ட ரயில்களிலும் பேருந்துச் சேவைகளிலும் பயணம் செய்பவர்கள் இந்திய கலாசாரத்தின் ஒரு கூறான ரங்ககோலி கோலங்களை அவற்றில் பார்த்து மகிழ்ந்து கொண்டாட்ட உணர்வில் திளைக்கலாம்.
எம்ஆர்டி ரயில்களிலும் பேருந்துகளிலும் தீபாவளி களை கட்டிவிட்டது.
பெருவிரைவு ரயில்களிலும் பேருந்துகளிலும் உள்ள ரங்கோலி கோல அலங்கரிப்பை போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (அக்டோபர் 3) காலை திறந்து வைத்தார்.
“இரண்டாண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் தீபாவளி பண்டிகையை தடைகளின்றி கொண்டாட வாய்ப்பமைந்துள்ளது,” என்றார் வர்த்தக உறவுகளுக்கும் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான திரு ஈஸ்வரன்.
“எப்போதும்போல, நிலப் போக்குவரத்து ஆணையம் லிஷாவுடன் இணைந்து தீபாவளியை முன்னிட்டு பொது போக்குவரத்து வாகனங்களை அலங்கரித்து பயணிகளிடம் பண்டிகை உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த வாய்ப்பளித்துள்ளன,” என்றும் அமைச்சர் கூறினார்
ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்திலிருந்து லிட்டில் இந்தியா ரயில் நிலையம் வரை நேற்று பயணம் செய்தார் திரு ஈஸ்வரன். ரங்கோலி அலங்காரங்களின் அழகை ரசித்ததுடன் ரங்கோலி அச்சைக் கொண்டு ரங்கோலி வடிவத்தை தாமே அச்சிட்டுப் பார்த்தார்.
தீபாவளி அலங்காரங்கள் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து அமைச்சு ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
லிஷாவின் கௌரவ செயலாளரான திரு ருத்திராபதி பார்த்தசாரதி, “நாங்கள் ஏற்பாடு செய்துள்ள அழகிய அலங்காரங்களைப் பார்த்து மக்கள் லிட்டில் இந்தியாவுக்கு குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வர விரும்புவார்கள் என நம்புகிறோம். லிட்டில் இந்தியாவில் உள்ள ஒளியூட்டைப் பார்க்க மக்களை ஊக்குவிப்பதோடு தீபாவளிப் பண்டிகைக்கு சில வாரங்கள் மட்டும் உள்ளன என்பதை அவர்களுக்கு நினைவூட்டவும் அலங்காரங்கள் உதவும்,” என்றார்.
இன்று முதல் நவம்பர் 13 வரை, வடக்கு-கிழக்கு, வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, டௌன்டவுன், வட்டப்பாதை ரயில் தடங்களில் செல்லும் சில ரயில்களில் தீபாவளி சிறப்பு அலங்காரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
மேலும், 23, 48, 147, 67, 960 ஆகிய பேருந்துச் சேவைகளிலும் இந்தியக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அழகிய வண்ணமயமான அலங்காரங்களைப் பொதுமக்கள் காணலாம்.
அத்துடன் லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் இம்மாதம் ரங்கோலி கோலங்களை வரையவும் அச்சிடவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
உள்ளூரைச் சேர்ந்த சிங்கரங்கோலி நிறுவனம், அக்டோபர் 8ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் அந்நடவடிக்கைகளை நடத்தும்.