கட்டுமான நிறுவனம் அமர்த்திய துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்று, ஐந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வைத்திருந்தது.
இந்நிலையில், மனிதவள அமைச்சு இதுகுறித்து நடத்திய விசாரணையில் புதிய தகவல் அம்பலமானது.
அந்தப் பிரதான கட்டுமான நிறுவனமே அதன் 268 சொந்த ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ஷாங்காய் சோங் கீ எனும் அந்நிறுவனம் 268 ஊழியர்களுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை வழங்கியுள்ளது. எஞ்சிய சம்பளத்தை தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது என்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்தார்.
துணை ஒப்பந்த நிறுவனமான ஸெங்டா கார்ப்பரேஷனின் பத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அங் மோ கியோ ஸ்திரீட் 62ல் உள்ள ‘என்சிஎஸ் ஹப்’ வளாகத்தின் நுழைவு, வெளியேறும் வாயில்களை வழிமறித்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த வளாகத்தின் வரவேற்பு பகுதியை புதுப்பிக்கும் பணியை ஏற்று இருந்த ஷாங்காய் சோங் கீ, ஆறு வெளிநாட்டு ஊழியர்களை வழங்க ஸெங்டா கார்ப்பரேஷனை அமர்த்தியது.
மனிதவள அமைச்சின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பத்தில் ஐந்து பேருக்கு ஸெங்டா கார்ப்பரேஷன் சம்பள பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் இன்னமும் காவல்துறை விசாரணையில் இருக்கிறது என்று திரு ஸாக்கி முகம்மது கூறினார்.