லண்டன்/மியூனிக்: பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் இந்த விடுமுறைக் காலத்தில் ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டின் எண்ணிக்கையை மிஞ்சிவிட்டது.
மியூனிக், பாரிஸ் நகரங்களில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளிலும் சுற்றுப்பயணிகளுக்கிடையே பிரபலமாக இருக்கும் இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கொள்ளைநோய்க்குப் பின் முதல்முறையாகத் தங்களின் குடும்பத்தாரைக் காண்பதற்காக சிலர் இவ்வாறு பயணம் மேற்கொள்வதாகக் கூறப்படும் நிலையில் 2022ல் பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும் இவ்வாண்டு 22% கூடுதலானோர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் செல்வார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பயணம் மேற்கொள்வோரின் மனதில் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இஸ்ரேல்,ஹமாஸ் போர் தொடர்பில் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக நவம்பர் மாத இறுதியில் ஐரோப்பியப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரியா, சுலோவேனியா, போஸ்னியா ஆகியவை பயங்கரவாத மிரட்டல் தொடர்பான தத்தம் நாட்டு எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளன. போராளிகள் நாட்டுக்குள் வரும் அபாயத்தைச் சுட்டி, சுலோவேனியாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டை மீண்டும் நடப்புக்குக் கொண்டுவந்தது இத்தாலி.
இதற்கிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோரில் 2.4% முதல் 3% பயணிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களைத் தொடர்ந்து பயணிகள் நாடி வருகின்றனர்.
இத்தாலி, ஆஸ்திரியா, சுவீடன் போன்ற நாடுகளுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் சென்றுள்ள பயணிகள் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 25% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.