மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டுபோனதாகவும் 40பேர் காயமடைந்துவிட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தின் வழிபாட்டு நேரத்தில் நடந்தது.
இரவுபகலாக மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 30 பேரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்தவர்களை மோப்ப நாய் மற்றும் அகழ்பொறி உதவியுடன் அந்நாட்டு ராணுவத்தின் அவசர சேவை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் எனவும் காயமடைந்த 40 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் எனவும் தமாலிபாஸ் மாநிலத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் ஜார்ஜ் குல்லார் கூறினார்.
மேலும், காணாமல்போன 30 பேரைத் தேடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் வணிகர்கள் இடிபாடுகளை அகற்ற உதவும் கருவிகளைக் கொண்டு வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது அவர் நன்றி தெரிவித்துகொண்டார்.