நோவல் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் புதிதாக இந்தக் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (பிப்ரவரி 3) 3,235 ஆக ஆனதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,438 ஆனதாகக் கூறப்பட்டது.
ஹுபெய் மாகாணத்தில் மட்டும் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 13,522ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், திங்கட்கிழமை வரை 632 நோயாளிகள் குணமடைந்து விட்டதாக சீன சுகாதார அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 4) தெரிவித்தனர்.
கொரோனா கிருமித் தொற்றை முறியடிக்கும் போராட்டத்தில் இருக்கும் சீனா, அறுவைசிகிச்சைக்கான முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், பாதுகாப்புக் கண்ணாடிகள் போன்றவை அவசரமாகத் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டது.
பயணக் கட்டுப்பாடுகள், வெளியேற்றங்கள் போன்றவற்றால் கிருமித் தொற்று பற்றிய அச்சத்தை அதிகப்படுத்துவதாக அமெரிக்காவை சீனா நேற்று குற்றம்சாட்டியபோதும், உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக, கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மருத்துவ நிபுணர்களை நாட்டுக்குள் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
#கொரோனா #வூஹான் #தமிழ்முரசு