பேங்காக்: நீண்டகாலத்துக்குப் பிறகு தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் வீதிகள் மீண்டும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படுகின்றன.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தாய்லாந்து செல்லும் சுற்றுப்பயணிகள் அங்கு குறிப்பிட்ட காலத்திற்குத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாண்டின் பெரும்பகுதியில் மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள், வர்த்தகங்கள், உணவகங்கள் ஆகியவை இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. நாட்டில் சுற்றுப்பயணத்துறை மீட்சியடையும் என்ற எதிர்பார்ப்புடன் அவை உள்ளன.
பல்வேறு பயணத் திட்டங்களின்கீழ் ஏறத்தாழ 16,000 வெளிநாட்டுப் பயணிகள் ஏற்கெனவே தாய்லாந்து வந்திறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.