கைவிடப்பட்ட அதிவேக ரயில் திட்டத்தால் ரிஷி சுனக் அரசுக்கு ஆபத்து

கைவிடப்பட்ட அதிவேக ரயில் திட்டத்தால் ரிஷி சுனக் அரசுக்கு ஆபத்து

2 mins read
f9ac1275-b226-4e7b-bfaf-d10141284239
இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் அமைக்கப்படவிருந்த அதிவேக ரயில் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ரயில் நகரமான க்ரூவிற்குப் புத்துயிர் அளிக்க உதவும் ஒரு புதிய திட்டத்தை இங்கிலாந்து அரசாங்கம் கைவிட்டது. அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கான அவர்களின் இந்த முயற்சி தற்போது ஆட்சிக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கட்டடத்தை சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு வளாகமாக மாற்ற பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டிருந்தது.

மேலும், இது அங்கு ஏற்கெனவே பேருந்து முனையமும் கார் நிறுத்துமிடமும்  கட்டப்பட உள்ள நிலையில் ரயில் நிலையத் திட்டம் அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இத்திட்டத்தை அந்நாட்டு அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

உயரும் பணவீக்கம், வீழ்ச்சியடைந்து வரும் சொத்து மதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் அமைக்கப்படவிருந்த அதிவேக ரயில் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“க்ரூவ் ஓர் அழிந்துவரும் நகரம் போல் உணர்கிறேன். அதை மேம்படுத்த உதவக்கூடிய திட்டங்களில் அதிவேக ரயில் திட்டமும் ஒன்று என நான் நினைத்தேன். ஆனால், இப்போது அது நடக்கப் போவதில்லை,” என க்ரூ நகரத்தில் வசிக்கும் ஆண்டி லூயிஸ் தெரிவித்தார்.

எச்எஸ்2 எனப்படும் அதிவேக ரயில் திட்டத்திற்கான ஒட்டுமொத்த மதிப்பீட்டுச் செலவு 100 பில்லியன் பவுண்டுகளுக்கு ($126 பில்லியன்) மேல் உயர்ந்ததால், இத்திட்டத்தைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ரத்து செய்தார்.

மேலும் இதுபோன்ற பெரிய திட்டங்களை நிர்வகிப்பதில் அடிப்படைச் சிக்கல் இருப்பதாக அந்நாட்டு உள்கட்டமைப்புக் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்தது.

“இது ஒரு கடினமான முடிவு. ஆனால் திட்டத்திற்கான செலவீன அதிகரிப்பு, கொவிட்-19 கொள்ளை நோய் தொற்றுக்குப் பிறகு தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை சரிவு ஆகிய காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டது,” எனக் கடந்த ஜனவரி மாதம் வடக்கு நகரமான அக்ரிங்டனில் பேசியபோது திரு சுனக் விவரித்தார்.

இதன்மூலம் சேமிக்கப்படும் மொத்த தொகையும் மீண்டும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முதலீடு செய்யப்படும் என்றார் திரு சுனக்.

குறிப்புச் சொற்கள்