வாஷிங்டன்: வட காஸாவில் முழுவீச்சில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாட்டு சபை உணவுத் திட்டத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
அதனையொட்டி இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த அவர் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.
“பஞ்சம் நிலவுகிறது. வடக்குப் பகுதியில் முழுவீச்சில் பஞ்சம் உள்ளது. இப்போது தெற்குப் பகுதிக்கும் அதே நிலைமை வரலாம்,” என்று உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநரான சிண்டி மெக்கெய்ன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார். அந்த நேர்காணலின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமையன்று (மே 3) வெளியிடப்பட்டது.
காஸாவுக்கு உதவிப் பொருள்களை அனுப்ப முயற்சி செய்துவரும் பல்வேறு மனிதாபிமான குழுக்களில் உலக உணவுத் திட்டமும் அடங்கும்.
காஸாவில் உணவு கிடைக்கும் சாத்தியம் சற்று மேம்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது. எனினும், பஞ்சம் ஏற்படும் அபாயம் தொடர்வதாகவும் அது குறிப்பிட்டது.
காஸாவில் 2.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
ஐக்கிய நாட்டு சபையும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் போதிய வேகத்தில் உதவிப் பொருள்களை வழங்கவில்லை என்று இஸ்ரேல் தொடர்ந்து குறைகூறிவந்துள்ளது.