இந்தித் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கானும் சல்மான்கானும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘டைகர் Vs பதான்’ எனும் படத்தில் அவர்கள் இருவரும் இணையவுள்ளனர் என்று பொழுதுபோக்கு இணையத்தளமான ‘டெட்லைன்’ செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஷாருக் நடிப்பில் அண்மையில் வெளியாகி, மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘பதான்’ படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார்.
இந்நிலையில், “ஷாருக்கையும் சல்மானையும் ஒரு முழுப் படத்திலும் இணைந்து நடிக்க வைக்கவுள்ளார் சித்தார்த். இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே இதுவே ஆகப் பெரிய படமாக இருப்பதற்குத் தேவையான ஆதரவு அனைத்தும் சித்தார்த்திற்கு வழங்கப்படும்,” என்று இந்தித் திரையுலக வட்டாரம் கூறியதாக ‘டெட்லைன்’ குறிப்பிட்டுள்ளது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
முன்னதாக, 1995ஆம் ஆண்டு ‘கரண் அர்ஜூன்’ படத்தில் ஷாருக்கும் சல்மானும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின் முழுப் படத்திலும் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. ‘பதான்’ படத்தில் சல்மான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.