அவாண்ட் நாடகக் குழுவின் மாபெரும் படைப்பு ‘பரமேஸ்வரா’

புதுமுகங்களின் அறிமுகத்தோடு மார்ச் 21ஆம் தேதி அவாண்ட் நாடகக் குழுவின் ‘பரமேஸ்வரா’ நாடகம் மேடையேறியது

அவாண்ட் நாடகக் குழுவின் மாபெரும் படைப்பு ‘பரமேஸ்வரா’

2 mins read
5eee7181-2917-4710-a402-393768194531
15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளவரசர் பரமேஸ்வராவின் கதையைக் கூறும் பரமேஸ்வரா நாடகம் மாணவர்களுக்கு ஒரு வரலாற்று அனுபவமாக இருக்கும். - படம்: அவாண்ட் நாடகக் குழு 
multi-img1 of 2

மலாயாவில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளவரசர் பரமேஸ்வராவின் கதையைக் கருவாகக் கொண்டுள்ள ‘பரமேஸ்வரா’ நாடகம் மாணவர்களை இலக்காகக் கொண்டு மேடையேறுகிறது

“நமது வரலாற்றையும் மொழியின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும். இது மாணவர்களுக்கான படைப்பு என்று கூறலாம். இந்த நாடகம் மாணவர்களுக்கு நல்ல வரலாற்று அனுபவமாக அமையும் என்று நம்புகிறேன்,” என்றார் நாடகத்தின் இயக்குனர் ரகுவரன் நாயுடு, 40.

பல ஆண்டுகளாக நடிகராகப் பணியாற்றிய ரகுவரன், நாடகத்தை இயக்குவது இதுவே முதல்முறை. 

“இந்த நாடகத் தயாரிப்பின் மூலம், ஓர் இயக்குனராக எவ்வாறு என் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொண்டேன். இது மனநிறைவான அனுபவம்,” என்று புன்னகைத்தார் ரகுவரன். 

‘பரமேஸ்வரா’ நாடகத்தில் மேடையேறவிருக்கும் 11 வயது கவி நவ காளிதாசுக்கு இது இரண்டாவது மேடை அனுபவம்.

“நான் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அக்கதாபாத்திரத்துக்கு அதிகக் கோப சுபாவம் உண்டு - அந்த உணர்வை அடைய தொடக்கத்தில் சற்றுக் கடினமாக இருந்தாலும், உடன் நடித்தவர்கள் தொடர்ந்து ஊக்கமளித்தனர். இந்த நாடகத்தில் நடித்ததால் தமிழில் பல புதிய சொற்களையும் கற்றுக்கொண்டேன்,” என்றார் கவி. 

அவாண்ட் நாடகக் குழு மேடையேற்றவுள்ள ‘ஆம்ரபாலி’ நாடகத்துக்கான வசன ஒத்திகையும் நடைபெற உள்ளது. 

“ஒரு கதையை எப்படி மக்களிடம் சுருங்கச் சொல்லலாம் என்பதே இலக்கு. இது ஒரு நாடகத் தயாரிப்பின் முன் விளம்பரம் என கூறலாம்,” என்றார் இயக்குனர் செல்வா, 56. 

‘ஆம்ரபாலி’ இந்திய வரலாற்றில் இடம்பெற்ற ஒரு கதை. இந்தக் கதை, நாடகமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு உருமாறி உள்ளது என்றார் செல்வா. 

இருபெரும் நாடகத் தயாரிப்புகளின் ஏற்பாடுகள் சவால்மிக்கதாக இருப்பினும், கற்றல் வாய்ப்புகள் அதிகம் என்றார் துணைத் தயாரிப்பு மேலாளர் மாளவிகா, 24. துணைத் தயாரிப்பு மேலாளராக பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

‘பரமேஸ்வரா’ நாடகம் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் பகல் 2 மணிக்கும் 5 மணிக்கும் ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் இடம்பெறுகிறது. 23ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு கூடுதலாக ஒரு காட்சி அரங்கேறும்.

‘ஆம்ரபாலி’ நாடக வசன நடை ஒத்திகை மார்ச் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

மேல் விவரங்களுக்கு காண்க https://avantparameswara.eventbrite.sg  

குறிப்புச் சொற்கள்