சிங்கப்பூர் கொவிட்-19 பாதிப்பு: ஜூரோங் சாஃப்ரா விருந்து தொடர்பான சம்பவங்கள்தான் ஆக அதிகமானவை
சிங்கப்பூரில் நேற்று கொரோனா கிருமி (கொவிட்-19) தொற்றியிருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஆறு பேரில் மூவர் சாஃப்ரா ஜுரோங் விருந்து நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட தொற்று சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்.
கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களிலேயே சாஃப்ரா ஜூரோங்கில்தான் ஆக அதிகமானோருக்கு கிருமி தொற்றியுள்ளது.
இங்கு நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோர் என மொத்தம் 39 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது.
“கிருமித்தொற்று எங்கிருந்து யாரிடம் இருந்து தொற்றியது என்பதை ஆராய்வது, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட ஒருவர் தொடர்ந்து வேலைக்குச் செல்வதாலும் சமூக நடவடிக்கைகளில் பங்கெடுப்பதாலும் கிருமிப்பரவல் பன்மடங்காகக்கூடும். எனவே கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் கிருமி எங்கிருந்து, யாரிடம் இருந்து தொற்றியது என்பதைக் கண்டுபிடிப்பது மிக முக்கியம்,” என்று மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் நேற்று வலியுறுத்தினார்.
“சிங்கப்பூரில் கிருமிப்பரவல் பெருமளவில் தலையெடுத்தால், அதனைச் சமாளிப்பதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நன்மையையும் ஆதாயத்தையும் பெற முடியும். அப்போதுதான் நம்மிடம் உள்ள மருத்துவ வளங்களைக் கொண்டு அதிகமானோருக்குச் சிகிச்சை வழங்கும் தேவையைக் குறைக்க முடியும்,” என்று மேலும் திரு கென்னத் வலியுறுத்தினார்.
கொரோனா கிருமிப் பரவல் தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!
#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்