சிங்கப்பூரில் புதிதாக 65 பேருக்கு கிருமித்தொற்று; மூன்று புதிய குழுமங்கள்
சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 3) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 65 பேரையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,114 ஆகியுள்ளது.
சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப், மரினா பே சேண்ட்சில் உள்ள ‘சி ல வி’ இரவு விடுதி, ராபிள்ஸ் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளம் ஆகியவை அந்த புதிய குழுமங்கள்.
‘சி ல வி’ இரவு விடுதியில் நான்கு கிருமித்தொற்று சம்பவங்களும், சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப்பில் ஆறு சம்பவங்களும், அந்த கட்டுமானத் தளத்தில் 4 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எண் 50 மார்க்கெட் ஸ்திரீட்டில் உள்ள புரோஜெக்ட் குளோரியில் அமைந்துள்ள கட்டுமானத்தளம் முன்பு கோல்டன் ஷூ கார் பார்க் இருந்த இடத்தில் உள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 9 வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட கிருமித்தொற்று. அவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியான் ஆகியவற்றுக்குச் சென்று வந்தவர்கள்.
உள்ளூரில் ஏற்பட்ட 56 கிருமித்தொற்று சம்பவங்களில் 40 ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவை.
புதிய 16 சம்பவங்களுக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் முயற்சி தொடர்கிறது. சிங்கப்பூரில் முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்பில்லாத சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 127 ஆக உள்ளது.
இன்று 16 மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதையும் சேர்த்து மொத்தம் 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 473 பேரில் 25 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இங்கு இதுவரை நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய நலமாக உள்ள, ஆனால் கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடாத 354 பேர் கான்கோர்ட் இன்டர்நேஷன்ல் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, கிளனீகல்ஸ் மருத்துவமனை மற்றும் டி’ரிசார்ட் என்டியுசியில் உள்ள சமூக தனிமைப்படுத்தும் இடம் ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை 1.55 மணிக்கு சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் ஐந்தாவது நபர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
#சிங்கப்பூர் #கொவிட்-19