கிருமி தொற்றியவர்கள் வருகை புரிந்ததைத் தொடர்ந்து ஆறு பள்ளிவாசல்கள் மூடல்
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிங்கப்பூரில் உள்ள ஆறு பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்தனர். இதனையடுத்து அந்த ஆறு பள்ளிவாசல்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள யூசோஃப் இஷாக் பள்ளிவாசல், புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள அல்-ஈமான் பள்ளிவாசல், பெத்தெம்பாத்தான் மலாயு செம்பவாங் பள்ளிவாசல், அப்துல் ஹமீது கம்போங் பசிரான் பள்ளிவாசல், ஹஜ்ஜா ஃபாத்திமா பள்ளிவாசல், அல்-ஃபலா பள்ளிவாசல் ஆகியவை பாதிக்கப்பட்ட அந்த ஆறு பள்ளிவாசல்களாகும்.
சுத்தம் செய்யும் பணிகளுக்காக அவை மூடப்பட்டதை அடுத்து அவை நாளை (ஏப்ரல் 30) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) இன்று (ஏப்ரல் 29) தெரிவித்தது.
இதற்கிடையே, இந்த ஆறு பள்ளிவாசல்களுக்கும் வருகை புரிந்த கொவிட்-19 நோயாளிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய சுகாதார அமைச்சுக்கு முயிஸ் உதவி வருகிறது. பள்ளிவாசலில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் இருப்பதன் முக்கியத்துவம், தொடர்புகளின் தடமறிவதற்கு ‘டிரேஸ்டுகெதர்’ பயன்பாடு ஆகியவற்றை இச்சம்பவம் நினைவூட்டுவதாக முயிஸ் அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது.