டான் டோக் செங் மருத்துவமனையில் தங்கியிருந்த மூதாட்டிக்கு கொவிட்-19 அறிகுறிகள்
டான் டோக் செங் மருத்துவமனையின் பொது வார்டு ஒன்றில் தங்கி இருந்த 72 வயது மூதாட்டிக்கு கொவிட்-19 தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து தனிமை வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது நேற்று (ஏப்ரல் 28) பரிசோதனையில் உறுதியாகியது.
அதே வார்டில் தாதியாக வேலை பார்த்த பிலிப்பீன்ஸ் நாட்டவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த வார்டிலிருந்து எவரும் வெளியேறவோ உள்ளே செல்லவோ கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட வார்டைச் சேர்ந்த ஊழியர்கள், நோயாளிகள் ஆகியோரிடம் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் மூதாட்டி ஓங் கிம் சூவுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவருடன் இரு நோயாளிகள், மருத்துவர் ஒருவர் என மேலும் மூவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
மூட்டு அழற்சி தொடர்பில் திருவாட்டி ஓங், மருத்துவமனையின் ‘சி’ பிரிவு வார்டில் சேர்க்கப்பட்டார். ஆனால், சென்ற சனிக்கிழமை அவரது தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
மறுநாளே, இருமலுடன் காய்ச்சலும் வந்தது. செவ்வாய்க்கிழமைதொண்டையில் வலி அதிகரித்ததுடன் மறுநாள் உடம்பு வலியும் ஏற்பட்டது.
அதே நாளில் அவருக்கு கொவிட்-19 பரிசோதனையும் செய்யப்பட்டது.
வார்டில் இருந்த நோயாளிகள் முகக்கவசங்கள் அணியவில்லை என்றும் அறுவை சிகிச்சைக்குரிய முகக்கவசத்தை வார்டில் வேலை பார்த்த மருத்துவர்கள் மற்றும் தாதியர் அணிந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது.
திருவாட்டி ஓங் உள்ளிட்ட அந்த நால்வர் மீதும் மேற்கொண்டு பரிசோதனை நடத்தி வருவதால் புதன்கிழமை கிருமித்தொற்று நிலவரத்தில் இவர்கள் சேர்க்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திருவாட்டி ஓங் இன்னமும் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை. தொடர்புகளின் தடமறியும் அதிகாரிகள் தம்மிடம் விவரம் கேட்டதுடன் தாம் சந்தித்த நபர்களைப் பற்றியும் அறிய விரும்பியதாக அவர் கூறினார்.
திருவாட்டி ஓங்கை மருத்துவமனையில் தினமும் வந்து பார்த்த அவரின் கணவர், இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மூதாட்டியின் மகன் மற்றும் ஏழு வயது பேரன் இன்று (ஏப்ரல் 29) முதல் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதே ஹோட்டலில் மூதாட்டியின் மகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மருத்துவமனை தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய சிலர், அந்த ஹோட்டலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நுகரும் ஆற்றலை சற்று இழந்ததுபோல் தோன்றுவதாக திருவாட்டி ஓங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். மூச்சுத் திணறல் இல்லை என்றும் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே அது ஏற்படுகிறது என்றும் மூதாட்டி பகிர்ந்துகொண்டார்.
மேலும், தம் குடும்பத்தை நினைத்தால் கவலையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
“என் மகன், மகள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். என்னை வந்து அவர்கள் மருத்துவமனையில் பார்த்ததில் எனக்கு கோபம். குறிப்பாக, என் பேரனை நினைத்தால் கவலையாக இருக்கிறது. என்னை வந்து பார்க்க வேண்டாம் என்று நான் கூறியிருந்தேன். இப்போது அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,” என்றார் திருவாட்டி ஓங்.