சிங்கப்பூர், ஹாங்காங் பயண ஏற்பாடு மீண்டும் ஒத்திவைப்பு
சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையே தனிமை உத்தரவு இல்லாத பயண ஏற்பாடு மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு அண்மையில் அதிகரித்து இருப்பதே இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் ஹாங்காங் வணிக, பொருளியல் துறை செயலாளர் எட்வர்ட் யாவும் இந்த விவகாரம் குறித்து இன்று (மே 17) காலை கலந்தாலோசித்ததாக சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
“சிங்கப்பூர், ஹாங்காங் பயண ஏற்பாட்டைத் தொடங்குவதில் இருதரப்பும் தொடர்ந்து வலுவான கடப்பாடு கொண்டுள்ளன. எனினும், சிங்கப்பூரில் அண்மையில் சமூக அளவில் முந்தைய கொவிட்-19 பாதிப்புகளுடன் தொடர்பில்லாத கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இந்த பயண ஏற்பாட்டைத் தொடங்குவதற்கான தகுதிக்கூறுகளை சிங்கப்பூரால் பூர்த்திசெய்ய முடியவில்லை,” என்று அமைச்சு விவரித்தது.
எனவே, சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் பொதுமக்கள், பயணிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, பயண ஏற்பாட்டை ஒத்திவைக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அமைச்சு கூறியது.
பொதுச் சுகாதார நிலவரத்தை இரு நகரங்களும் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் பயண ஏற்பாட்டைத் தொடங்குவதற்கான புதிய தேதியை அவை பின்னர் மறுஆய்வு செய்யும் என்றும் அமைச்சு தெரிவித்தது.