ஹாங்காங் பயணச்சீட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர்-ஹாங்காங் இருவழி பயண ஏற்பாடு அடுத்த மாதம் 26ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு அதற்கான பயணச்சீட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துவிட்டன.
இரு நகரங்களுக்கும் இடையிலான பயணம் நீண்ட தாமதத்திற்குப் பிறகு ஒருவழியாக மே 26ஆம் தேதி தொடங்கும் என்றும் தனிமைப்படுத்தல் நடைமுறையற்ற பயண ஏற்பாடு இது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அறிவிப்பு வெளியானதுமே பயணிகள் உடனடியாக விமானப் பயணச் சீட்டுகளை வாங்கத் தொடங்கிவிட்டனர். அதன் காரணமாக மே 26 முதல் ஜூன் 4 வரையிலான ஹாங்காங் ஒருவழி பயணச்சீட்டுகள் அனைத்தும் இன்று (ஏப்ரல் 27) நண்பகல் வாக்கில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களும் அறிவித்தன.
அதே நேரம் ஜூன் 7 முதல் மேற்கொள்ளப்படும் பயணத்திற்கான கட்டணம் $586லிருந்து தொடங்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், ஜூன் 5ஆம் ேததி முதல் ஹாங்காங் செல்வதற்கான பயணச்சீட்டுகள் கிடைக்கும் என்று அறிவித்துள்ள கேத்தே பசிபிக், அதற்கான கட்டணம் $636 முதல் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் செல்வதற்கான பயணத் தேவை அதிகமாக இருப்பதுபோல ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கான தேவையும் அதிகரித்து உள்ளது.
மே 26 முதல் ஜூன் 3 வரை அங்கிருந்து சிங்கப்பூர் வருவதற்கான ஒருவழி பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதேநேரம் ஜூன் 4ஆம் தேதிக்கான பயணக்கட்டணம் $995 முதல் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹாங்காங்-சிங்கப்பூர் ஒருவழிப் பயணத்திற்கான கேத்தே பசிபிக் விமானப் பயணத்தின் அடுத்தகட்டம் ஜூன் 1 தொடங்கும்போது அதன் விலை $706லிருந்து தொடங்கும் என்று அது கூறியுள்ளது.
இருவழி பயண ஏற்பாட்டு முறையின் கீழான தங்கள் நிறுவனத்தின் விமானப் பயணத்திற்கு வலுவான தேவை இருப்பதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் கூறினார். இருப்பினும், வர்த்தக ரகசியத்தன்மை கருதி எத்தனை பயணிகள் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்துள்ளார்கள் என்ற விவரத்தை வெளியிட அவர் மறுத்தார்.
இரு நகரங்களுக்கும் இடையிலான விமானப் பயணம் கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் ேததி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால், ஹாங்காங்கில் கொவிட்-19 சம்பவங்கள் அப்போது அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து அந்த ஏற்பாடு தள்ளிவைக்கப்பட்டது.
இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு சிங்கப்பூரில் இருந்தும் ஹாங்காங்கில் இருந்தும் தலா ஒரு விமானம் இயக்கப்படும் என்றும் ஒவ்வொரு விமானத்திலும் பயணம் செய்யக் கூடியவர்களின் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் என்றும் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு நேற்று (ஏப்ரல் 26) தெரிவித்தது.
இரு வாரங்களுக்கு இதே நிலைமை நீடிக்கும் என்றும் ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு வாரத்திற்கு இரு விமானங்களை இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.