டான் டோக் செங் மருத்துவமனை உள்நோயாளிகளை அனுமதிக்கத் தொடங்கியது
உள்சிகிச்சை பெறும் நோயாளிகளை இன்று (மே 18) மீண்டும் கட்டம் கட்டமாக ஏற்றுக்கொள்ள தொடங்கிய டான் டோக் செங் மருத்துவமனை, அதன் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
மருத்துவமனையின் 12,000 ஊழியர்களுக்கு இருமுறையும் அங்கு தற்போது தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறு முறையும் கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனை தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (மே 18) இதனைத் தெரிவித்தது.
அங்கு கொவிட்-19 பரவத் தொடங்கியதால், உள்சிகிச்சைக்காக புதிதாக வருபவர்களைஅனுமதிக்கப் போவதில்லை என்று மருத்துவமனை இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. உள்சிகிச்சை பெற வருவோர் இனி அனுமதிக்கப்படுவார்கள் என்று டான் டோக் செங் மருத்துவமனை நேற்று (மே 17) அறிவித்தது.
கடைசியாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதன் வார்டுகளில் கொவிட்-19 தொற்றியதாகவும் அங்கு தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் அல்லது தனிமையில் உள்ளதாகவும் மருத்துவமனை கூறியது.
பாதுகாப்பு வலுப்பெற்றபோதும் தனது முன்னணி மருத்துவப் பராமரிப்பு ஊழியர்கள் உண்மையான, உடனடி ஆபத்துகளை எதிர்நோக்குவதாகவும் மருத்துவமனை அதன் பேஸ்புக் பதிவில் கூறியது.
தீவிரப் பரிசோதனைகள், கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொண்டாலும் ஆபத்துகளைக் குறைக்க மட்டும் முடியுமே தவிர அகற்ற முடியாது என்றது அது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு, முன்கூட்டியே பதிந்துகொண்ட ஒரு வருகையாளர் நாளுக்கு ஒருமுறை சென்று நோயாளியைப் பார்க்க முடியும். அதிகபட்சம் அவர்கள் அங்கு 30 நிமிடங்கள் இருக்கலாம். தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை
வருகையாளர்கள் பார்க்க அனுமதி உண்டு. அத்துடன் அவசர சிகிச்சைப் பிரிவும் இனி இயங்கும்.
மருத்துவமனை வளாகத்தில் இன்று (மே 18) தாதிகள் தனிப்பட்ட பாதுகாப்புக் கவச ஆடைகளை அணிந்து காணப்பட்டனர்.
டான் டோக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடைய 46 பேருக்கு இதுவரை கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.