எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஜப்பான்
தோக்கியோ: குறுகியகால வர்த்தகப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள் ஆகியோர் ஜப்பானுக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று அந்நாடு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) அறிவித்துள்ளது.
எனினும், சுற்றுப்பயணிகளுக்கான பயணத் தடை தொடர்கிறது.
நாளை மறுதினம் திங்கட்கிழமை (நவம்பர் 8) முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்த்தகப் பயணிகள் ஜப்பான் வந்திறங்கியவுடன் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. தற்போது தனிமைப்படுத்தல் காலம் குறைந்தது 10 நாள்களாக உள்ளது.
ஜப்பானின் மக்கள்தொகை 126 மில்லியன். தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கடந்த ஆகஸ்ட் மாதம், தினமும் 25,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று பதிவாகி வந்தது. ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது சராசரியாக 200க்குக் குறைந்துள்ளது.