சிங்கப்பூரில் புதிதாக 1,165 பேருக்கு கொவிட்-19; ஓமிக்ரான் பாதிப்பு குறைந்தது
சிங்கப்பூரில் திங்கட்கிழமை நண்பகல் (ஜனவரி 17) நிலவரப்படி, புதிதாக 1,165 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை பதிவான 863 தொற்றுப் பாதிப்புகளைவிட இது அதிகம்.
எனினும், ஓமிக்ரான் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 609ஆக குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 675ஆக பதிவானது.
கொவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு அதன் இணையத்தளத்தில் அன்றாடம் வெளியிட்டு வரும் தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 பாதிப்பு 1,000ஐ தாண்டியிருப்பது டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு இதுவே முதன்முறை.
வாராந்திர தொற்று விகிதம் திங்கட்கிழமை 1.6ஆக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை இந்த விகிதம் 1.49ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்றால் புதிதாக மரணம் எதுவும் பதிவாகவில்லை.
மருத்துவமனைகளில் 217 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 பேர் உள்ளனர்.