சிங்கப்பூரில் புதிதாக 1,448 பேருக்கு கொவிட்-19; தொற்று விகிதம் ஏறுமுகம்
சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 1,448 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 990 பேருக்கு உள்ளூரில் தொற்றுக்கு ஆளாகினர். எஞ்சிய 458 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
சுகாதார அமைச்சு அதன் இணையப் பக்கத்தில் வெளியிட்டு வரும் அன்றாட தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 1,165 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு ஒரேநாளில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி இருப்பது அதுவே முதன்முறை.
இதற்கிடையே, 589 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 609ஆக இருந்தது.
வாராந்திர தொற்று விகிதம் செவ்வாய்க்கிழமை 1.76ஆக கூடியது. திங்கட்கிழமை இது 1.6ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்று காரணமாக புதிதாக எவரும் மரணம் அடையவில்லை.
மருத்துவமனைகளில் 247 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிக்கைப் பிரிவில் 13 பேர் உள்ளனர்.