கொவிட்-19: கத்தாரில் மூன்று வாரக் குழந்தை மரணம்
கத்தாரில் பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை ஒன்று கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துவிட்டது.
கொவிட்-19 காரணமாக குழந்தை உயிரிழப்பு குறித்து கத்தாரில் தகவல் வெளியாவது அரிது.
“கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்பு காரணமாக மூன்று வாரக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துவிட்டது,” என்று கத்தாரின் பொதுச் சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) தெரிவித்தது.
“அந்தக் குழந்தைக்கு வேறெந்த மருத்துவப் பிரச்சினையோ பரம்பரையாக வந்த நோயோ இல்லை,” என்று கூறிய அமைச்சு, கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து கத்தாரில் உயிரிழந்த இரண்டாவது குழந்தை அது என்றது.
கொவிட்-19 தொற்று காரணமாக சிறார் மரணம் அடைவது அடிக்கடி நிகழும் சம்பவம் அல்ல. எனினும், ஓமிக்ரான் தொற்று தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் சிறாரிடையே தொற்று அதிகரித்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.