எட்டு மாதங்களில் இருமுறை கொவிட்-19 தொற்றுக்கு ஆளான சிங்கப்பூர் நிரந்தரவாசி
கடந்த எட்டு மாதங்களில் இருமுறை கொவிட்-19 தொற்றுக்கு ஆளானார் ஜான் (அவரது உண்மையான பெயரல்ல).
கடந்த மே மாதம் அவர் வெளிநாட்டில் இருந்தபோது டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த டிசம்பரில் ஓமிக்ரான் திரிபும் அவரை விட்டுவைக்கவில்லை.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையில் (விடிஎல்) டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்திறங்கினார் ஜான். அதே விமானத்தில் பயணம் செய்த வேறொருவருக்குத் தொற்று உறுதியானதாக ஜானிடம் தெரியப்படுத்தப்பட்டது.
‘பிசிஆர்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் ஜான். பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதியானது.
கடந்த ஆண்டு மே மாதம் தம்முடைய குடும்பத்தார் அனைவரும் தொற்றுக்கு ஆளானபோது ஏற்பட்ட சவால்களை இன்னும் மறந்திடாத நிலையில், தம்மை மீண்டும் கிருமி தொற்றிய செய்தி கேட்டு ஜான் அதிர்ந்து போனார்.
தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்ட அவர், எட்டு நாள்கள் கழித்து வீடு திரும்பினார். அண்மைய தொற்றுப் பாதிப்பு லேசானதாக இருந்தது குறித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஜான்.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரு தவணை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் ஜான்.