முன்பதிவு செய்யாமல் 5-11 வயதுள்ள சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி தொடங்கியது
ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் முன்பதிவு இல்லாமல் நேரடியாகச் சென்று கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) அன்று தொடங்கியது.
இனி ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை அந்த வயதுப் பிரிவுள்ள சிறுவர்கள் முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி, போடும் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் ஆவர்.
சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக் கடந்த வெள்ளிக்கிழமையன்று இதைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கான இந்தச் சிறப்பு ஏற்பாடு நடப்புக்கு வந்துள்ளது.
முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிறுவர்களுடன் தடுப்பூசி நிலையங்களுக்குச் செல்லும் அவர்களது சகோதரர்கள் மட்டுமே முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள இதற்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது.