கொவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கிய பிரிட்டன்
பிரிட்டன், கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான தான் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
கொவிட்-19 தொற்றினால் கடும் நோய், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஆகியவை ஏற்படும் அபாயத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது.
“இனி நாட்டு மக்கள் அனைவரையும் குறிவைத்து நடவடிக்கைகள் எடுப்பதை விடுத்து, அபாயத்தில் இருப்பவர்களைக் காப்பதே எங்கள் குறிக்கோள்,” என்று பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு அமைப்பு விளக்கியது.
முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு, தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைக் காண்பிக்கக் கோரும் நடைமுறை போன்ற விதிமுறைகள் வியாழக்கிழமை (ஜனவரி 27) அன்றோடு முடிவுக்கு வந்தன.
வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கூறும் அறிவுரை பிரிட்டனில் சென்ற வாரத்துடன் நின்றது.
ஓமிக்ரான் தொற்று காரணமாக பிரிட்டன் சிறிது காலம் கட்டுப்பாடுகளை விதித்தது.
எனினும், இந்தக் கட்டுப்பாடுகள் வேண்டா விருப்பாகத்தான் அந்நாட்டில் விதிக்கப்பட்டது.
தனிநபர் சுதந்திரம், வர்த்தக சுதந்திரம் போன்றவற்றை பாதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்க எண்ணம் கொண்டுள்ள மற்ற நாடுகளும் பிரிட்டனின் இந்த நடவடிக்கையை கூர்ந்து கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.