பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள்: அதிகரித்த அன்றாடக் கிருமித்தொற்று
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பணிபுரியும் 55 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போட்டிகளின்போது பதிவான ஆக அதிகமான அன்றாடத் தொற்று எண்ணிக்கை இது என்று போட்டிகளின் சுகாதார பிரிவுத் தலைவர் குறிப்பிட்டார்.
போட்டிகளுக்காக விமான நிலையத்தில் வந்திறங்கிய 29 பேரிடம் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்கள் ஏற்கெனவே சீனாவில் இருந்து போட்டிகளுக்கான பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள்.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடர்பில் பத்து நாள்களாக 60,000க்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் 287 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவரும் அன்றாடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அதோடு, மற்றவர்களுடனான தொடர்பைக் குறைத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் உள்ளதாக போட்டிகளின் சுகாதாரப் பிரிவு கூறியது.
மற்ற நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவரும் நிலையில், சீனா அதன் எல்லைகளை மூடி அனைத்துலக விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது.
முற்றாகக் கிருமிப் பரவல் இல்லாத நிலையை அடைய சீனா அதன் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.