வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொவிட்-19 விதிமுறைகள் மேலும் தளர்வு
கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள், பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து வெளியேறும் அனுமதியை (exit pass) பெற விண்ணப்பிக்கத் தேவையிராது.
தங்குவிடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள், குறிப்பிட்ட சில இடங்களுக்குச் செல்வதற்கு முன்பு வெளியேறும் அனுமதியைத் தற்போது பெறவேண்டியுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மட்டும் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல வெளியேறும் அனுமதியைப் பெறவேண்டும். விடுதிகளிலிருந்து புறப்படுவதற்கு முன்பு அத்தகையோர் ஆன்டிஜன் விரைவு பரிசோதனையும் (ஏஆர்டி) செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு வியாழக்கிழமை (மார்ச் 24) தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் சமூகத்துடன் ஒன்றிணைய தொடர்ந்து அனுமதி அளிக்கப்படாது.
தங்குவிடுதிகளில் வசிக்கும் ஊழியர்களில் 98 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களிடத்தில் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி விகிதமும் அதிகமாக உள்ளது.