கட்டுமானத் துறை ஊழியர்கள் வேலையிடங்களிலும் தங்குவிடுதிகளிலும் அதிகமான வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் ஆராய உள்ளனர்.
அதில் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 40 ஊழியர்கள் மீது ஆய்வு நடத்தப்படும்.
அவர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவர்களின் உடல் உறுப்புகளின் வெப்ப நிலை, உடலுக்குத் தேவையான வெப்ப அளவு, போன்றவை கண்காணிக்கப்படும்.
ஊழியர்கள் எளிதில் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைக் குறைக்கவும் தடுக்கவும் ஆய்வாளர்கள் தீர்வுகளை பரிந்துரை செய்வார்கள்.
பருவநிலை மாற்றத்தால் உலகில் வெப்பம் உயரும் என்றும் கடும் வெப்பம் உண்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆய்வு முக்கியமாகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட ஹீட்சஃப் எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆய்வு நடைபெறும்.
தென் கிழக்காசியாவில் உள்ள மக்களின் உடல்நலனையும் வேலை உற்பத்தித் திறனையும் வெப்ப நிலை உயர்வு எவ்வாறு பாதிக்கிறது என்று திட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரைப் பொருத்தவரை, இங்கு காற்றில் உள்ள ஈரத்தன்மையும் அதிகப்படியான கட்டடங்களும் வெப்பத்தை இன்னும் அதிகமாக்குகின்றன.
வெளியிடங்களில் வேலை செய்பவர்கள், காற்றோட்டம் குறைவான அல்லது அறவே இல்லாத இடங்களில் வேலை செய்வோர், இதய நோய் போன்ற பிரச்சினைகள் உள்ள முதியவர்கள் ஆகியோருக்கு அதிக வெப்பத்தால் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படலாம்.
ஆய்வின் தலைமை ஆய்வாளர்கள் இணைப் பேராசிரியர் ஜேசன் லீ இதைத் தெரிவித்தார்.
அளவுக்கு அதிகமான வெப்பத்தால், மூர்ச்சையாகுதல் அல்லது மரணம் கூட ஏற்படலாம் என்பதை பலரும் அறிவார்கள்.
ஆனால், கட்டுமானம், உடல் உழைப்பு சார்ந்த துறைகளில் விபத்துகள், வேலை உற்பத்திக் குறைவு போன்றவையும் ஏற்படும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் லீ கூறினார்.