இந்தியா, கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டுவர போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கறுப்பு பூஞ்சை எனும் புதிய தொற்று நாடு முழுவதும் பரவுவதால் புதிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்ட ‘மியூகோர்மைகோசிஸ்’ எனும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு தமிழகத்திலும் நுழைந்துள்ளது.
இதையடுத்து கறுப்பு பூஞ்சை பாதிப்பை புதிய தொற்றாக அறிவிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையில் தொற்றுநோய் சட்டத்தின்கீழ் கறுப்பு பூஞ்சையை வகைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக என்டிடிவி தெரிவித்தது.
இதனால் மாநிலத்தில் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர் களின் விவரங்களை சுகாதார அமைச்சுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
“அனைத்து மாநில அரசாங்கங்களும் தனியார் சுகாதார வசதிகளும் மருத்துவக் கல்லூரிகளும் கறுப்பு பூஞ்சையை நிர்வகிக்கும், கண்டறியும், பரிசோதனையிடும் வழிகாட்டிகளை பின்பற்ற வேண்டும்,” என்று சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கறுப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மட்டும் நூறு பேர் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,500 பேர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 90 பேர் இந்தத் தொற்றுக்கு பலியாகிவிட்டனர்.
ஹரியானாவில் 115 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.