இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டைக் குண்டுவைத்து தகர்க்கப்போவதாக மிரட்டிய சந்தேக ஆடவர் ஒருவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவின் பீகார் மாநிலம், டர்பங்கா மாவட்டத்தில் பிடிபட்ட அந்த ஆடவர், விசாரணைக்காக மும்பைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பையில் உள்ள சர் எச்என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு, அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து இரு தொலைபேசி அழைப்புகள் வந்தன.
மருத்துவமனையையும் முகேஷ் அம்பானியின் 'அன்டிலியா' வீட்டையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி அழைப்பை ரத்துசெய்துவிட்டார் அந்த ஆடவர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தொலைபேசியில் மிரட்டல் விடுத்த ஆடவர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்தது பீகாரை சேர்ந்த ஆடவர் என்று தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறையினர் மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாக தகவல் கிடைத்ததால், முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.