மும்பை: கடந்த 2023 ஏப்ரல் மாதம், மும்பை மாநகரின் விரார் பகுதியில் உள்ள ஓர் உணவகத்திற்கு, இட்லி, தோசை, அவல், தேநீர் கேட்டு நாள்தோறும் அதிகாலை 4 மணியளவில் பணிப்புகள் (order) வந்தன.
அப்பகுதியிலுள்ள சுற்றுப்பயணிகள் இருள் விலகாத அதிகாலையில் உணவு கேட்க மாட்டார்களே என்று அந்த உணவகம் ஐயம் கொண்டது. இதுபற்றி காவல்துறைக்கும் அது தகவல் அளித்தது.
காவல்துறை ஆராய்ந்தபோது, அந்த உணவுவகைகள் அனைத்தும் அப்பகுதியில் இருக்கும் ஒரு பங்களா வீட்டிற்கும் ஒரு தங்குவிடுதிக்கும் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவ்விரு இடங்களுக்கும் யார் வந்து செல்கின்றனர் என்று காவல்துறை சிறிது காலம் கண்காணித்து வந்தது.
இறுதியில், அங்கு போலி அழைப்பு மையம் செயல்பட்டு வந்ததைக் காவல்துறை கண்டுபிடித்தது. அதன் தொடர்பில் 40க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
அந்தத் தங்குவிடுதியில் 50க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளும் மேசைக் கணினிகளும் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அங்கு வேலை செய்தவர்கள், இணையவழி ஆலோசனைச் சேவை ஒன்றின் வாடிக்கையாளர்களாக இருந்த ஆஸ்திரேலியக் குடிமக்களைத் தொடர்புகொண்டு, அவர்களுடைய தரவுகளைப் பெறுவதற்காக ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல்லை (ஓடிபி) மோசடியாக அவர்களிடமிருந்து பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்காக, ஆஸ்திரேலியர்கள் போன்று பேசும் ஆங்கில உச்சரிப்புப் பயிற்சியும் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசி, மறைச்சொல்லைப் பெறுவது எப்படி என்ற பயிற்சியும் அந்த மோசடி அழைப்பு மைய ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
தங்களது நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்காமல், அவர்கள் அடிக்கடி இடம் மாறியபடியே இருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி குறிப்பிட்டது.