பெட்டாலிங் ஜெயா: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் மூன்றாம் தரப்பாகச் செயல்படும் இடைத்தரகர்களின் சேவைகளை முடிவிற்குக் கொண்டுவர மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க ஆகும் செலவில் கிட்டத்தட்ட 80% குறையலாம் என்று மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் சரியான நேரத்தில் இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சையது ஹுசைன் சையது ஹுஸ்மான் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் செயல்முறையில் இடைத்தரகர்களை நீக்குவது நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கும் என்றும் மலேசிய நிறுவனங்கள் மீதான மதிப்பை அது உயர்த்தும் என்றும் டாக்டர் ஹுஸ்மான் குறிப்பிட்டார்.
இடைத்தரகர்கள் நுழையும்போது, ஆட்சேர்ப்புக் கட்டணத்தைச் செலுத்த ஊழியர்கள் கூடுதல் வட்டிக்குக் கடன் வாங்கும் அல்லது தங்களது சொத்துகளை அடைமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதனால் ‘கடன் பிணை’யில் சிக்கிக்கொள்ள நேரிடுவதாக அவர் சொன்னார்.
இடைத்தரகர்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதே மலேசியாவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது என்று டாக்டர் ஹுஸ்மான் குறிப்பிட்டதாக 'தி ஸ்டார்' செய்தி தெரிவிக்கிறது.
முன்னதாக, அதிகச் செலவு ஏற்படுவதால் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் மூன்றாம் தரப்பு முகவர்களைப் பயன்படுத்துவதை மனிதவள அமைச்சு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தாம் விரும்புவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
மலேசிய நிறுவனம் ஒன்று, நேப்பாளத்தில் இருந்து ஒருவரை வேலைக்கு எடுக்க நிறுவனங்களுக்கு ஏறக்குறைய 3,700 ரிங்கிட் செலவாகிறது என்றும் மாறாக முகவர்களின் இடையீடு காரணமாக பங்ளாதேஷ், இந்தோனீசியா நாடுகளில் இருந்து ஆளெடுக்க ஒருவருக்கு 20,000 முதல் 30,000 ரிங்கிட் செலவாகிறது என்றும் திரு அன்வார் சுட்டினார்.
இதனையடுத்து, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதன் மூலம் மூன்றாம் தரப்பினர் பயனடைவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மலேசிய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் நேற்று தெரிவித்தார்.