முகைதீன் யாசினின் புதிய அரசாங்கத்தில் பூமி புத்திரர்கள் எனப்படும் மலாய்க்காரர்களின் கட்சியே முன்னிலை வகிப்பதால் மலாய் அல்லாத சமூகத்தினரிடையே கவலைகள் அதிகரித்து உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் கோலாலம்பூரில் இருந்து தெரிவித்து உள்ளார்.
தங்களது உரிமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களிடம் எழுந்திருப்பதாகத் தெரிகிறது.
தெரசா தாமஸ், 56, எனப்படும் இல்லத்தரசி கூறுகையில் மலாய் அல்லாதவர் என்ற முறையில் தற்போது பெற்று வரும் சிறிய அளவிலான உரிமைகள் கூட புதிய அரசாங்கத்தால் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டு விடும் என்று கவலைப்படுவதாகத் தெரிவித்தார்.
இன, சமயம் தொடர்பான வாக்குவாதங்கள் அதிகரிக்கும் என்பதோடு சமய உறவுகள் மேலும் பலவீனமடையும் என்பதே எனது கவலை.
பல இன நாட்டில் ஓர் இனத்தின் பிடியில் உள்ள அரசாங்கம் எந்தளவுக்கு நன்மை பயக்கும் என்பதை இனிமேல்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
சுமார் 32 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட மலேசியாவில் கிட்டத்தட்ட 70% மலாயக்காரர்கள். 23 % சீனர்கள். எஞ்சிய ஏழு விழுக்காட்டினர் இந்தியர்.
எட்டாவது பிரதமராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்ற முகைதீனுக்கு பாஸ் கட்சி, அம்னோ, பெர்சத்து, சரவாக் கபுங்கான் கட்சி ஆகியன ஆதரவு அளிக்கின்றன.
மலேசிய சீனர் சங்கம், மலேசிய இந்தியர் காங்கிரஸ் ஆகியவற்றைச் சேர்ந்த கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரை ஆதரிக்கின்றன. இருப்பினும் இந்தப் புதிய கூட்டணி மலாய் ஆதரவுக் கொள்கைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இஸ்லாமிய அரசாங்கம் என்னும் நோக்கத்தில் பாஸ் கட்சி வெளிப்படையாக இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அதேநேரம் மலாய் சமூகத்தினரின் உரிமைகளையும் சலுகைகளையும் முன்னுறுத்துவது அம்னோ.
ஆனால், இந்தப் புதிய கூட்டணியில் இனவாதக் கருத்துகளுக்கு இடமில்லை என்று அம்னோ தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களை மட்டுமே உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்க உதவியதற்காக மஇகாவையும் மசீசவையும் இந்தியர்களும் சீனர்களும் மன்னிக்கமாட்டார்கள் என்று தாஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுக்கழக இயக்குநர் ஜேம்ஸ் சின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பாவர்கரூப் ஏஷியா என்னும் ஆலோசனை நிறுவனத்தின் இயக்குர் அஸ்ருல் யாதி அப்துல்லா சானி கூறுகையில் இவ்விரு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிப்பதைப் பொறுத்தே இவ்விரு சமூகங்களுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவைத் தெரிந்துகொள்ளலாம் என்றார்.
#மலேசியா #அரசியல் #எதிர்காலம் #தமிழ்முரசு