ஓடும் ரயிலில் பயணிகள்மீது ஆடவர் ஒருவர் தீவைத்ததால் மூவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது.
ஏப்ரல் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் இந்தக் கோரம் நிகழ்ந்தது.
இறந்தவர்களில் இரண்டு வயதுக் குழந்தையும் ஒரு பெண்ணும் அடங்குவர்; குறைந்தது எண்மருக்குத் தீக்காயம் ஏற்பட்டது.
இரவு 9.45 மணியளவில் கோழிக்கோடு நிலையத்தை ரயில் அடைந்ததும் அந்தச் சந்தேகப் பேர்வழி அதில் ஏறியதாகக் கூறப்படுகிறது.
ரயில் கோரப்புழா ரயில்வே பாலத்தைக் கடந்தபோது அவன் சக பயணி ஒருவர்மீது எரிதிரவத்தை ஊற்றி, தீவைத்ததாகச் சொல்லப்படுகிறது.
ரயில் கண்ணூர் நிலையத்தை அடைந்ததும் ஒரு பெண்ணையும் குழந்தையையும் காணவில்லை என்று பயணிகள் சிலர் புகாரளித்தனர்.
“காயமடைந்த ஆடவர் ஒருவர் அப்பெண்ணையும் குழந்தையையும் தேடினார். அப்பெண்னின் செருப்பையும் கைப்பேசியையும் கண்டுபிடித்தோம்,” என்று சக பயணி ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.
தகவலறிந்து தண்டவாளத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறை, மூன்று உடல்களைக் கண்டுபிடித்தது.
அவர்கள் ரயிலில் இருந்து விழுந்திருக்கலாம் அல்லது தீயைக் கண்டதும் ரயிலிலிருந்து குதிக்க முயன்றிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
மாண்டுகிடந்த இன்னோர் ஆடவரின் அடையாளம் தெரியவில்லை என்றும் அந்தப் பெண், அக்குழந்தையின் உறவினர் என்றும் கூறப்பட்டது.
இதனிடையே, கோரப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் ரயில் நின்றதும் தீவைத்த ஆடவர், ரயிலில் இருந்து குதித்து, அவருக்காகக் காத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.