சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் 17 நாள்களாக சிக்கிக்கொண்டு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு நேர்ந்த பயங்கரத்தை வர்ணித்தனர்.
தங்கள் மனநிலையைத் திடப்படுத்திக்கொள்ள பிரார்த்தனை செய்ததையும் அவர்கள் பகிர்ந்தனர்.
மீட்கப்பட்ட 41 ஊழியர்களில் ஒருவரான தீபக் குமார், “எங்களுக்கு மிகவும் அச்சமாக இருந்தது. ஒவ்வொரு தருணமும் மரணம் அருகில் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். எங்களது உயிர் காக்கப்படுமா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் புதன்கிழமை கூறினார்.
57 மீட்டர் நீள எஃகு குழாய் வழியாக சக்கர தூக்குப் படுக்கைகளில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டனர்.
மாலை அணிவிக்கப்பட்டு அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட ஊழியரான பீகாரைச் சேர்ந்த சாபா அகமது, “உலகம் எங்களுக்கு மீண்டும் அழகாக உள்ளது. உள்ளே சிக்கியவர்களுக்கு மிகவும் சிரமமான தருணமாக இருந்தது என்பது எனக்குத் தெரியும். வெளியே காத்திருந்த குடும்பங்களுக்கு அதைவிட சிரமம்.
“ஆனால், கடைசியாக நாங்கள் வெளியே வந்துவிட்டோம். அதுதான் முக்கியம்,” என்றார்.
பீகாரிலிருந்து தொலைபேசி வழியாக ஏஎஃப்பியிடம் பேசிய அகமதின் மனைவி முசரத் ஜகான், தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை என்றார்.
“என் கணவருக்கு மட்டுமல்ல, எங்களுக்குப் புதுவாழ்வு கிடைத்துள்ளது. இதை நாங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்,” என்றார் அவர்.
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள், முழு மருத்துவப் பரிசோதனைக்காக புதன்கிழமை ஹெலிகாப்டரில் எய்ம்ஸ்-ரிஷிகேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்பவுள்ளனர்.
உத்தராகண்ட் அரசாங்கம் அவர்களுக்குத் தலா S$1,600 காசோலை வழங்கியுள்ளது. இத்தொகை அந்த ஊழியர்களின் அரையாண்டுச் சம்பளத்துக்குச் சமம்.
முன்னதாக, ஊழியர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சின்யலிசவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
சுரங்கத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர், வெளிமாநிலத் தொழிலாளர்களாவர். நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தில் உள்ள தங்களது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு வேலை தேடி அவர்கள் உத்தராகண்ட் சென்றனர்.
ஊழியர்கள் சிக்கிக்கொண்டாலும், சுரங்கத்தில் தாராளமான இடவசதி இருந்தது. அப்பகுதி 8.5 மீ. உயரமும் சுமார் 2 கி.மீ. நீளமும் கொண்டது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தி வந்த அனைத்துலக சுரங்க, நிலத்தடி சங்கத் தலைவர் ஆர்னல்ட் டிக்ஸ், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் கிரிக்கெட் விளையாடியது பற்றி தாம் கேள்விப்பட்டதாகச் சொன்னார்.
சுரங்கத்திற்கு வெளியே காத்திருந்த உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள் மீட்கப்பட்டபோது பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பரிமாறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சாலைப் போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், “சில்க்யாரா சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு இருப்பது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
“பல அமைப்புகளும் சேர்ந்து மேற்கொண்ட நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி இது. அண்மைய ஆண்டுகளில் முக்கியத்துவம் மிகுந்த மீட்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,” என்று கூறினார்.
மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தில் இருந்த இடிபாடுகளை உடைக்கத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.