புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமில்லை என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜேஎன்.1 கொரோனா கிருமித் திரிபு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி புதன்கிழமைவரை அத்திரிபால் 21 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
ஆயினும், இப்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை என்றும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெறுவதையே தெரிவுசெய்துள்ளனர் என்றும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.
கொவிட்-19 பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதமும் கூடவில்லை என்று ‘மனோரமா’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தியாவில் கடந்த இரு வாரங்களில் கொவிட்-19 தொற்றால் 22 பேர் இறந்துவிட்டனர்.
அந்நாட்டில் புதிதாக 594 பேரை கொவிட்-19 தொற்றிவிட்டதாக வியாழக்கிழமை பதிவானது.